பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், மேடையில் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் இருக்கைக்கு அருகில் அவரது மகள் காந்திமதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, பாமகவில் அதிகார மாற்றம் குறித்த ஊகங்களை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த நிலையில் இன்றைய பொதுக்குழு கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள், "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை", "ஐயாவின் முடிவே இறுதியானது" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர். இந்த பதாகைகள், அன்புமணியின் தலைமைக்கு எதிராக ராமதாஸின் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கருதப்படுகின்றன.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியின் அதிகாரத்தைப் பறித்துவிட்டு, காந்திமதிக்கு புதிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும் காந்திமதிக்கு மேடையில் இடம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் என சுமார் 4000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவுகள் என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு பாமக தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது.