Publish Date: Thu, 05 May 2022 (11:25 IST)
Updated Date: Thu, 05 May 2022 (11:27 IST)
தஞ்சையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் அரசர் மேல்நிலைப்பள்ளியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பிற்கும், நாளை 10 ஆம் வகுப்பிற்கும் அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
ஆம், தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 3,91,343 மாணவர்களும் 4,31,341 மாணவிகளும் எழுதுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம், வினாத்தாள் அறைகளுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், தஞ்சையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் அரசர் மேல்நிலைப்பள்ளியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தடையின்றி மின்சாரம் வழங்கும் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்ட நிலையில் பள்ளியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.