Publish Date: Tue, 03 Jan 2023 (08:48 IST)
Updated Date: Tue, 03 Jan 2023 (08:50 IST)
பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச பொருட்களை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கலுக்கு இலவச பச்சரிசி, கரும்பு சர்க்கரையுடன் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 9ம் தேதி நடைபெறும் இதற்கான நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்கிறார். 9ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு 200 டோக்கன் என்ற கணக்கில் வீடுகளுக்கே வந்து டோக்கன் அளிக்கப்பட உள்ளது. 6ம் தேதி விடுமுறை என்பதால் அன்று மட்டும் டோக்கன் வழங்கும் பணி இருக்காது. 8ம் தேதி வரை இந்த டோக்கன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.