Publish Date: Wed, 22 Sep 2021 (15:31 IST)
Updated Date: Wed, 22 Sep 2021 (15:57 IST)
புதுச்சேரி பாஜக மாநிலங்களவை வேட்பாளர் பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார்.
புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதியை பாஜக மேலிடம் நேற்று அறிவித்தது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் செல்வகணபதி, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாததால், பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.