Publish Date: Tue, 13 Mar 2018 (11:14 IST)
Updated Date: Tue, 13 Mar 2018 (11:16 IST)
காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த வழக்கறிஞரை தாக்கியதோடு மட்டுமில்லாமல், அவருடன் செல்பியும் எடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு வழக்கறிஞர் பெரியசாமி தனது கட்சிக்காரருடன் ஒரு புகார் கொடுக்க சென்றுள்ளார். அந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம், அது தொடர்பாக வழக்குபதிவு செய்யவில்லை. மேலும், புகாரைப் பெற்றுக்கொண்டதற்கன ரசீதும் (சி.எஸ்.ஆர்) கொடுக்கவில்லை.
இதை பெரியசாமி தட்டிக் கேட்க, வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது அவரின் முகத்தில் சுந்தரம் தாக்கியுள்ளார். இதனால், அவர் முகத்தில் ரத்தம் வழிந்தது. அப்போது, அவரை செல்பி எடுக்க சொல்லி, அவருக்கு பின்னால் சிரித்த படியயே சுந்தரம் போஸ் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகன் கிருஷ்ணன், இந்தப் புகைப்படத்தை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் காட்டி இதுபற்றி முறையிட்டார். இதுக்கண்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி “இது போன்ற காரியங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்கறிஞரை தாக்கியதோடு மட்டுமில்லாமல் அவரோடு சுந்தரம் செல்பியும் எடுத்துள்ளார். அவரின் செயலை மன்னிக்கவே முடியாது. இது தொடர்பாக நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்யும். இது தொடர்பான விசாரணை விரையில் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.