Publish Date: Fri, 20 Mar 2020 (15:36 IST)
Updated Date: Fri, 20 Mar 2020 (15:39 IST)
கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியமான ஆலோசனைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஒரு சிலர் கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களையும், மருத்துவமுறைகளையும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களை மக்களிடையே பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் எச்சரித்திருந்தனர். ஈரோட்டில் மூன்று நபர்கள் போலியான கொரோனா தகவல்களை பரப்பியதற்காக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கொரோனா குறித்து தவறான தகவல்களை பேசி வாட்ஸ் அப் மூலமாக பரப்பிய குற்றத்திற்காக ஹீலர் பாஸ்கரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் பல காலமாக பொதுவான மருத்துவ முறைகளுக்கு மாற்றான முறைகளை மக்களிடையே அதிகம் பேசி வருபவராக அறியப்படுகிறார். இவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கொரோனா என்பது இலுமினாட்டி சதி என்றும், தடுப்பு ஏற்பாடுகள் போலியானவை என்றும் பேசியிருக்கிறார். அந்த ஆடியோவை கேட்ட அதிகாரிகள் உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு பெண்களை வீட்டிலேயே பிரசவம் பார்க்க சொல்லி இவர் வீடியோ வெளியிட்டதற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.