Publish Date: Thu, 14 Jul 2022 (09:18 IST)
Updated Date: Thu, 14 Jul 2022 (09:19 IST)
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமீபத்தில் கொரோனா உறுதியான நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் சமீபத்தில் கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
அதை தொடர்ந்து தற்போது பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் “கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Prasanth Karthick
Publish Date: Thu, 14 Jul 2022 (09:18 IST)
Updated Date: Thu, 14 Jul 2022 (09:19 IST)