திமுகவை இன்னும் எட்டு மாதங்களில் வீட்டுக்கு அனுப்பி விடுவோம் என்றும், திமுக என்றாலே சூழ்ச்சிதான் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமகவில் நிலவும் குழப்பத்திற்கு திமுக செய்த சூழ்ச்சிதான் காரணம் என்பதை பாமகவினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். "திமுக என்றாலே சூழ்ச்சிதான். சூழ்ச்சியான கட்சி, சூழ்ச்சியான இயக்கம். இன்னும் எட்டு மாதத்தில் இந்த கொடுங்கோல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" என்று ஆவேசமாக பேசினார்.
மேலும், தமிழக அரசின் மீதான தனது விமர்சனங்களை பதிவு செய்த அன்புமணி, "வீதி வீதியாக போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு என்ற பெயரை, குடிகார நாடு, போதை நாடு, கஞ்சா நாடு என்று மாற்றிக் கொள்ளலாம். இதுதான் திமுக ஆட்சியின் லட்சணம்" என்று கடுமையாக சாடினார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய அவர், "ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்று ஒரு முதல்வர் சொல்கிறார். சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் பகிரங்கமாக பொய் சொல்கிறார். அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதிகாரம் இல்லை என யாராவது சொல்வார்களா? என்று விமர்சித்தார். அன்புமணியின் இந்த அதிரடி பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.