பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நிலவி வரும் மோதல் தீவிரமடைந்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழு எழுப்பிய 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி ராமதாஸ் இரண்டாவது முறையாகவும் பதில் அளிக்காததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமித்தபோது, அன்புமணி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். இதுவே தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான மோதல் வெளிப்படையாக தெரிய காரணமாக அமைந்தது. இதை தொடர்ந்து, பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. குறிப்பாக, பாமகவின் அதிகார போட்டி, கட்சியில் குடும்ப உறுப்பினர்களை நியமிப்பது போன்ற விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், ராமதாஸ் தரப்பு ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைத்தது. இந்த குழு, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு விளக்கம் கோரியது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க அன்புமணிக்கு அளிக்கப்பட்ட கெடு முடிவடைந்தும் அவர் பதிலளிக்கவில்லை. இதனால், அவர் மீது கட்சி விதிகளின்படி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் தலைமையிலான நிர்வாகக்குழு ஆலோசித்து வருகிறது.