Publish Date: Fri, 02 Apr 2021 (12:58 IST)
Updated Date: Fri, 02 Apr 2021 (13:01 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்த பிரதமர் மோடி எம்ஜிஆர் குறித்து பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் பிரதமர் மோடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று மதுரையில் நடக்கும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் ”மதுரை வந்தாரை வாழ வைத்த மண். நூற்றாண்டுகளுக்கு முன்பே சவுராஷ்டிரர்களை இந்த மண் ஏற்றுக் கொண்டுள்ளது. மதுரை மண் காந்தியிடம் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய மண். மதுரை வீரன் என்ற பெயரில் எம்ஜிஆர் நடித்த படத்தை யாராலும் மறக்க முடியுமா” என பேசியுள்ளார்.
மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், மேலும் பல தொலைநோக்கு திட்டங்கள் மதுரையில் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.