Publish Date: Wed, 09 Mar 2022 (15:13 IST)
Updated Date: Wed, 09 Mar 2022 (15:14 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன் ஜாமீன் கேட்டு அளித்திருந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க நினைக்கும்போதும் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுனர் முடிவெடுக்க முடியாது என்றும், குடியரசு தலைவருக்கு மட்டுமே அதற்கான அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு வாதாடி வருகிறது. மேலும் தண்டனை வழங்கபட்டபோது சம்மந்தப்பட்ட அரசு தான் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை மத்திய அரசு சுட்டிக்காட்டியது.
சம்பந்தப்பட்ட அரசு என்பது மாநில அரசுதான் என்னும் நீதிமன்றத்தின் வாதத்தை மறுத்து, மத்திய அரசுதான் சம்பந்தப்பட்ட அரசு என குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வாதாடியது.
இந்நிலையில் இறுதியாக 30 ஆண்டுகள் கழித்து பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. கடும் விவாதத்திற்கு பிறகு இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.