Publish Date: Thu, 04 Mar 2021 (12:21 IST)
Updated Date: Thu, 04 Mar 2021 (12:24 IST)
நகைகளை தற்போது அடகு வைத்தால் தேர்தலுக்கு பிறகு கடன் தள்ளுபடி என்ற வதந்தியால் மக்கள் வங்கி முன்பு குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின்போது கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் நகைகளுக்குள் பெறப்பட்ட விவசாய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் தேர்தலுக்கு முன்னர் நகைகளை அடகு வைத்தால் தேர்தலுக்கு பின் கடன் தள்ளுபடி என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வதந்தியை நம்பி ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் நகைகளை அடகு வைக்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டதால் பரபரப்பு எழுந்துள்ளது. பின்னர் வங்கி அதிகாரிகள் மக்களிடம் அந்த மாதிரியான அரசு அறிவிப்பு எதுவும் இல்லை என விளக்கமளித்து அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.