Publish Date: Mon, 13 Feb 2023 (12:07 IST)
Updated Date: Mon, 13 Feb 2023 (12:09 IST)
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் நலமுடன் இருக்கிறார் என்ற நற்செய்தியை தெரிவித்துக் கொள்வதாக பழ நெடுமாறன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய போது தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் பிரபாகரன் அறிவிக்க இருக்கிறார் என்றும் தமிழீழ மக்கள் மற்றும் உலக தமிழர்கள் ஒன்றுபட்டு அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை என்றும் இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த காலகட்டத்திலும் எத்தகைய உதவி பெறுவதில்லை என்பதில் பிரபாகரன் உறுதியாக இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்பு தளமாக அதை ஆக்கும் முயற்சிகள் சீனா ஈடுபட்டுள்ளது என்றும் சீனாவின் பிடியில் இருக்கும் அபாயத்தை எண்ணி பார்த்து அதனை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ் மக்களும் பிரபாகரனுக்கு துணையாக நிற்க வேண்டிக்கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.