Publish Date: Sun, 22 Oct 2017 (14:36 IST)
Updated Date: Sun, 22 Oct 2017 (14:39 IST)
மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது.
தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் ‘அக்னிபரீட்சை’ என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஹெச்.ராஜா, மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்ததாக தெரிவித்தார்.
இது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஹெச்.ராஜா பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் “மரியாதைக்குரிய எச்.ராஜா அவர்களுக்குரிய மரியாதையை குறைக்க வேண்டும். அவர் களவாடி(யாய்)மெர்சல் கண்டிருந்தால்..!” என டிவிட் செய்துள்ளார்.
மேலும், நான் எல்லோருக்கும் நண்பன்! ஆனால் சினிமாவை திருடி பிழைப்பவர்களுக்கும், அதில் கண்டு கழிப்பவர்களுக்கும் மூர்க்க எதிரி” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.