Publish Date: Sat, 24 Feb 2018 (13:46 IST)
Updated Date: Sat, 24 Feb 2018 (14:20 IST)
அரசியில் வானில் அரிதாரம் பூசிய புதிய வண்ண பலூன்கள் விரைவிலேயே வெடித்து சிதறும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 7 அடி வெண்கல சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று காலை 11.10 மணியளவில் திறந்து வைத்தனர். மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ என்ற நாளிதழும் வெளியிடப்பட்டது.
இரட்டை இலை சின்னத்தை ஜெ. காட்டிக் கொண்டிருப்பது போல் அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன்பின் ஜெ.வின் சிலையை வடிவமைத்த பிரசாத் என்பவருக்கு முதலமைச்சர் பழனிசாமி தங்க மோதிரம் அணிவித்து பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பேசியதாவது, இந்த ஆட்சியை நடத்துவது ஜெயலலிதா என்றும். அதிமுகவை அழிக்க துடிப்பவர்கள் விரைவில் அழிந்து போவார்கள் என கூறிய அவர், அரசியல் வானில் புதிதாக பறக்கும் வண்ண பலூன்கள் விரைவில் வெடித்துச் சிதறிவிடும் என நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை மறைமுகமாக விமர்சித்தார்.