விலகி ஓடிய ஓபிஎஸை விடாமல் விரட்டி பிடிக்கும் தம்பிதுரை: என்ன நடக்கிறது அதிமுகவில்!
விலகி ஓடிய ஓபிஎஸை விடாமல் விரட்டி பிடிக்கும் தம்பிதுரை: என்ன நடக்கிறது அதிமுகவில்!
அண்ணா நினைவு தினமான இன்று திமுக, அதிமுக கட்சிகள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிகளின் போது அதிமுக கட்சியின் செயல்பாடுகள் இன்று விசித்திரமாகவே இருந்தது.
இதற்கு முன்னர் பன்னீர்செல்வத்தை சசிகலா அவமதிப்பது போல நடந்து கொண்டார். ஆனால் இன்று அவரை தேடி தேடி முன்னிலைப்படுத்திய காட்சிகள் நடந்தன. சில தினங்களுக்கு முன்னர் சசிகலா தலைமையில் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாகதான் அமர வைக்கப்பட்டார் முதல்வர் பன்னீர்செல்வம்.
ஆனால் இன்று அண்ணா சமாதியில் மலர் வளையம் வைக்கும் போது கூட்டத்தில் ஒருவராக நின்றுகொண்டிருந்த பன்னீர்செல்வத்தை சசிகலா அழைத்து அவருடன் சேர்ந்து மலர் வளையம் வைத்தார். தொடர்ந்து ஜெயலலிதா, எம்ஜிஆர் சமாதிகளுக்கும் சென்று மரியாதை செலுத்தினர்.
அப்போது எல்லாம் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை வலுக்கட்டாயமாக தம்பிதுரை முன்னுக்கு நிற்க வைத்தார். ஒவ்வொரு இடத்திலும் இப்படி பின்வரிசையில் நின்றவரை தம்பிதுரை வலுக்கட்டாயமாக முன்னுக்கு இழுத்து நிற்க வைத்த காட்சிகளை காண முடிந்தது.
இதனை பார்க்கும் மக்களுக்கு இது புதிராகவே இருந்தது. முதல்வர் பன்னீசெல்வம் ஏன் விலகி விலகி செல்கிறார். அவரை ஏன் விடாப்பிடியாக முன்னாடி நிற்க வைக்கிறார்கள், அதிமுகவில் என்ன தான் நடக்கிறது என்ற குழப்பத்தில் உள்ளனர் மக்கள்.