Publish Date: Wed, 22 Mar 2023 (13:33 IST)
Updated Date: Wed, 22 Mar 2023 (21:35 IST)
அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. இதில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியானது. இதனால் இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர்.
தொடர்ந்து மதுரை வந்த ஓ.பி.எஸ்.,க்கு எதிராக அமமுக தொண்டர் ஒருவர் குரல் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி இரு தரப்பினர் மீதும் வழக்கு பதியப்பட்டத்து. இந்நிலையில் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து ஆர்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., ஐயப்பன் மற்றும் ஓ.பி.எஸ்., ஆதரவு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது இ.பி.எஸ்.,க்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டது. மேலும் 500 கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டது.