Publish Date: Thu, 02 Apr 2020 (09:29 IST)
Updated Date: Thu, 02 Apr 2020 (09:32 IST)
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட துணை முதல்வர் அம்மா உணவகத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், சந்தைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. நேற்று சென்னை மயிலாப்பூர், பட்டினபாக்கம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு திடீர் ஆய்வு பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உணவு சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறதா என்பது குறித்து பார்வையிட்டார். பின்னர் அங்கு உணவு அருந்த வருபவர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிலையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் கொரோனா பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். சந்தைகளில் சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அவர், அங்குள்ள அம்மா உணவகத்திற்கு சென்று உணவின் தரம், சுகாதாரம் குறித்து பார்வையிட்டதுடன், இட்லிகளை சாப்பிட்டு பரிசோதித்துள்ளார்.
தொடர்ந்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் அம்மா உணவகத்தில் சாப்பிட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.