திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வரும் நிலையில், தமிழக கோவில்களிலும் முன்பதிவு செய்யலாம் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இது, பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூன்று மாதங்களுக்கு முன்பே தரிசனம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கும் என்பதும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்தது.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி ஆகிய கோவில்களில் ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் வசதி உருவாக்கப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடப்பதாகவும், விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டால், பக்தர்கள் முன்பதிவு செய்து எந்தவித சிரமமும் இல்லாமல் சுவாமியை தரிசனம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.