குற்றவாளி தினகரன் ஜெயிலுக்கு போவது உறுதி: சூடுபிடிக்கும் ஆர்.கே.நகர் தேர்தல்!
குற்றவாளி தினகரன் ஜெயிலுக்கு போவது உறுதி: சூடுபிடிக்கும் ஆர்.கே.நகர் தேர்தல்!
Publish Date: Sun, 19 Mar 2017 (18:28 IST)
Updated Date: Sun, 19 Mar 2017 (18:32 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவையடுத்து அவரது ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அதிமுகவில் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. இதனையடுத்து யாருக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க இந்த தேர்தல் சோதனைக்களமாக உள்ளது.
அதே நேரத்தில் அதிமுக பிளவுபட்டுள்ள இந்த நேரத்தில் ஆர்.கே.நகரை கைப்பற்ற எதிர்க்கட்சியான திமுகவும் கூட்டணி அமைப்பதில் மும்மரமாக உள்ளது. இந்நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திமுகவுக்கு ஆதரவாக பேட்டியளித்துள்ளார்.
கோவையில் இது தொடர்பாக பேட்டியளித்த அவர், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்-ன் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக வேட்பாளருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
மேலும், அதிமுகவை பற்றி பேசிய அவர் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல் முடங்க வாய்ப்புள்ளதாக கூறினார். அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள தினகரன் ஒரு குற்றவாளி. அவர் ஜெயித்தாலும், தோற்றாலும் ஜெயிலுக்கு போவது உறுதி என்றார்.