Publish Date: Sun, 05 Sep 2021 (11:17 IST)
Updated Date: Sun, 05 Sep 2021 (11:19 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி கடந்த ஒன்றாம் தேதி மாரடைப்பு காரணமாக காலமான நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு ஒட்டுமொத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் தனது மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனக்கும் தனது குடும்பத்தினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என் அன்புக்குரிய மனைவி திருமதி ப, விஜயலட்சுமி அவர்கள் 01-09-2021 அன்று காலை இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்தவுடன், நேரிலும், தொலைபேசி மூலமாகவும், கடிதம் வாயிலாகவும், சமூக
வலைதளங்கள் மூலமாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் வருத்தம் தெரிவித்து, ஆறுதல் கூறி, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மாண்புமிகு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர், மாண்புமிகு பாரதப் பிரதமர், மேதகு தமிழ்நாடு ஆளுநர், மேதகு தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர், மேதகு மணிப்பூர் ஆளுநர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு மத்திய அமைச்சர்கள், மாண்புமிகு புதுச்சேரி யூனியன் பிரதேச முதலமைச்சர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், முன்னாள் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், திரைப்பட துறையினர், தொழிலதிபர்கள், பத்திரிகை மற்றும் ஊடகவியல் நண்பர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை நண்பர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவனின் அருளும், அனைவரின் ஆறுதல் வார்த்தைகளும் எனக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும், சக்தியையும் கொடுத்ததாக நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். இதற்காக எனது கோடானு கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.