Publish Date: Thu, 16 May 2019 (08:37 IST)
Updated Date: Thu, 16 May 2019 (08:38 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தால் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட பருவத் தேர்வுகளில் 6 கல்லூரிகளின் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாக, அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளின், முந்தைய ஆண்டு பருவத் தேர்வுகளின் தேர்ச்சி விகிதம் தரவரிசைப்படுத்தப்படும். இந்த தரவரிசை பட்டியலை பார்த்துதான் மாணவர்கள் நல்ல கல்லூரி எது என்பதை புரிந்து கொண்டு அந்த கல்லூரிக்கு விண்ணப்பம் செய்வார்கள்
இந்த நிலையில் இந்த தரவரிசைப்பட்டியலில் அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், கோவை ஆகிய பகுதிகளில் உள்ள 6 பொறியியல் கல்லூரி மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 171 கல்லூரிகளின் மாணவர்கள் 10 முதல் 25 சதவிகிதம் வரையில் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 74 பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொறியியல் கல்லூரிகளின் தரம் தெரிந்துள்ளது. இந்த கல்லூரிகளை இந்த ஆண்டு பொறியியல் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.