Publish Date: Thu, 08 Feb 2018 (15:44 IST)
Updated Date: Thu, 08 Feb 2018 (17:34 IST)
ஆண்டாளை அவமதித்ததாக கூறி கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமனுஜம் இருந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பெரிதாக யாரும் கலந்து கொள்ளவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பல இந்து அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்தன. அதற்காக, வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும், அவர் ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். ஆனால், அந்த போராட்டம் ஒரே நாளில் முடிவிற்கு வந்தது.
அந்நிலையில், வைரமுத்து பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்காவிட்டால் தான் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பேன் என ஜீயர் மீண்டும் அறிவித்தார். ஆனால் வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை. எனவே, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமனுஜம் வைரமுத்துவை கண்டித்து இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். மேலும், அனைத்து இந்துக்களும் இதில் பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். எல்லோரும் இதில் கலந்து கொள்வார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில், ஜீயர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பெரிதாக யாரும் கலந்து கொள்ளவில்லை என செய்திகள் வெளிவந்துள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், அந்த மண்டபத்தில் ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர்.
இதைவைத்து, சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.