Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா.?

Chennai Rain

Senthil Velan

, செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (16:34 IST)
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தில் 6 நாட்களுக்கு  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. 
 
இதன் காரணமாக, இன்று (செப்.24) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
செப்.25-ம் தேதி, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  மேலும் தரைக்காற்று ஒருசில இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்.26 ஆம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
 
செப்.27ம் தேதி முதல் செப்.28ம் தேதி வரையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செப்.29-ம் தேதி முதல் செப்.30ம் தேதி வரையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
 
தமிழக கடலோரப்பகுதிகளில், செப்.24ம் தேதி முதல் செப்.27ம் தேதி வரையில், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வங்கக் கடல் பகுதிகளில், செப்.25 மற்றும் செப்.26 ஆம் தேதிகளில், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
அரபிக்கடல் பகுதிகளில், செப்.25ம் தேதி முதல் செப்.28ம் தேதி வரையில், தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், என்பதால், மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு..!!