Publish Date: Fri, 16 Mar 2018 (10:48 IST)
Updated Date: Fri, 16 Mar 2018 (10:51 IST)
2018-2019ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓபிஎஸ் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் எதிர்பார்த்த அளவுக்கு எதுவும் சிறப்பாக இல்லை என்று பலரும் கூறி வருகின்றனர். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தமிழகத்தில் ஒருவரிடத்திலும் வரவேற்பு பெறவில்லை. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால் எதிர்க்கட்சிகள் குறை கூறுவது வழக்கமாக இருந்தாலும் ஒரு சில நிதி ஒதுக்கீடு சிலர் வரவேற்கும் விதத்தில் கருத்து தெரிவிப்பார்கள்.
ஆனால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2018-2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் புஷ்வானம் போல் போனது. பட்ஜெட் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ், வளர்ச்சிக்கு வழி வகுக்காத இந்த பட்ஜெட்டால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இலக்குகளை விட குறைவாக செலவு செய்வதும், அதிக வருவாய் ஈட்டுவதும் தான் நல்ல அரசுக்கு அடையாளம். தமிழக அரசின் செயல்பாடு தலைகீழாக உள்ளது என்று கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக அரசு தாக்கல் செய்திருப்பது, பற்றாக்குறை பட்ஜெட்டாக இருக்கிறது. பல்வேறு திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் கடன் சுமை மேலும் அதிகமடையுமே தவிர, தமிழகம் வளர்ச்சியடையாது. தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகவே பட்ஜெட் அறிவிப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.