Publish Date: Thu, 26 Sep 2019 (11:24 IST)
Updated Date: Thu, 26 Sep 2019 (11:33 IST)
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யாவை இன்று சிபிசிஐடி விசாரணை நடத்துகின்றனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சீப் மெடிக்கல் ஆஃபிஸ்ராக பணிபுரிந்து வந்தவர் வெங்கடேசன். இவரது மகனான உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளது சமீபத்தில் தெரியவந்தது.
இது குறித்து மருத்துவ கல்லூரியின் டீன், அளித்த புகாரின் பேரில் விசாரனை நடைபெற்றது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர் தனது குடும்பத்துடன் தலைமறைவானதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனிடையே மாணவர் சார்பாக முன் ஜாமீன் வழங்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது.
இதனை தொடர்ந்து உதித் சூர்யா குடும்பத்தோடு திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உதித் சூர்யாவின் மேல் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் அவரது தாய் கயல்விழி மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரையும் சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் தேனி சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அவர்களிடன் இன்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் உதித் சூர்யாவை போல, மேலும் 2 பேர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கோவையில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.