Publish Date: Thu, 27 Aug 2020 (11:02 IST)
Updated Date: Thu, 27 Aug 2020 (11:41 IST)
பதவி கொடுத்தாலும் பாஜக மீது இருக்கும் வருத்தம் இப்போதும் இருக்கிறது என நயினார் நாகேந்திரன் பேட்டி.
தமிழகத்தில் பாஜக தொண்டர்கள், கட்சி செயல்பாடு குறித்து தமிழக பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு உள்ளானது. பாஜக மீது அவர் வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்தது குறித்து அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு எழுந்தது.
இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்தார் நயினார் நாகேந்திரன். வருத்தம் உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்வேன். கட்சி தலைமையின் கொள்கையையும், தொலைநோக்கு பார்வையையும் , உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாத அவசரக்குடுக்கைகளை கண்டு ஒவ்வொரு பாஜக காரனுக்கும் ஏற்படும் நியாயமான கோபமும் வருத்தமும் எனக்கும் உண்டு. என் கோபம் பாஜகவை விட்டு செல்பவர்களுக்கு எதிரானது என்றும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து அவருக்கு கட்சியில் தென்மண்டல பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த பதவியை ஏற்றுக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் நிறைய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள். அவர்கள் ஆளுமை மிக்க தலைவர்களாக நாட்டை ஆள்வார்கள்.
பாஜக மீது அதிருப்தி இருந்தது உண்மைதான். அதனால் பதவி கொடுக்கவில்லை. அதிருப்தி இருந்ததால் பதவி கொடுத்தார்கள் என்றால் எனக்கு மாநில பொதுச்செயலாளர் பதவி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால் இந்த பதவி கொடுத்துள்ளனர். ஆக மொத்தம் வருத்தம் வருத்தம்தான் என்று வெளிப்படையாக பேசினார்.