Publish Date: Wed, 17 Jan 2018 (15:56 IST)
Updated Date: Wed, 17 Jan 2018 (15:59 IST)
அதிமுக முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், தனக்கு வழங்கப்பட்ட இன்னோவா காரை அதிமுக அலுவலகத்தில் இன்று ஒப்படைத்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது நாஞ்சில் சம்பத்துக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவியை அளித்ததோடு, அவருக்கு இன்னோவா காரையும் கொடுத்து அசத்தினார் ஜெயலலிதா. ஆனால் ஒரு பேட்டியின்போது சர்ச்சைக்குரிய பதிலை கூறியதால் அவரது பதவி பறிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆனவுடன் நாஞ்சில் சம்பத்துக்கு மீண்டும் கொடுத்தார்.
ஜெ.வின் மறைவிற்கு பின் தினகரனின் தீவிர ஆதரவாளராக நாஞ்சில் சம்பத் செயல்பட்டு வந்தார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். எனவே, அவரின் பதவியை எடப்பாடி தரப்பு பறித்தது. மேலும், ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை இன்று மதியத்திற்குள் அதிமுக தலைமையகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையேல் போலீஸ் புகார் அளிக்கப்படும் என்றும் அதிமுக தலைமை நாஞ்சில் சம்பத்துக்கு நேற்று தகவல் அனுப்பியது.
இதுகுறித்து தனது வட்டாரத்தில் கூறிய நாஞ்சில் சம்பத், 'இந்த இன்னோவா கார் எனக்கு அம்மா கொடுத்தது. என்னவோ இவர்கள் சொந்த பணத்தில் கொடுத்தது போல திரும்ப கேட்கின்றார்களே! இவ்வளவு தரக்குறைவாக அரசியல் செய்கிறதே அதிமுக' என்று புலம்பியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலை அவரின் இன்னோவா கார் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.