Publish Date: Sat, 27 Mar 2021 (09:22 IST)
Updated Date: Sat, 27 Mar 2021 (16:15 IST)
தாமரை மலரும் தமிழ் நாடு வளரும் என கூறி பாஜகவிற்கு ஆதரவாக நடிகை நமிதா பிரச்சாரம்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று அவருக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார். கோவை காந்திபுரம் ராமர் கோவில் பகுதியில் பிரசசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்பொழுது பேசிய அவர் வானதி சீனிவாசன் எங்கு பிறந்து இங்கு வளர்ந்து உங்களுக்காக சேவை செய்து வருகிறார் என்று தெரிவித்தார். கடந்த ஐந்து வருடங்களில் இந்த தொகுதி மக்கள் 18 ஆயிரம் பேருக்கு மோடியின் திட்டங்களை கொண்டு சேர்த்துள்ளார் என்றும் 300 பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்விக்கு வருடம் பத்தாயிரம் ரூபாய் வழங்கி உள்ளார் என்றும் கூறினார். அது மட்டுமின்றி அனைத்து விழாக்களுக்கும் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு கலாச்சாரமும் கடவுள் நம்பிக்கையும் உள்ள பூமி என்று தெரிவித்த அவர் அந்த நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு எப்படி ஓட்டு போடுவது என்றும் கேள்வி எழுப்பினார். எனவே இங்கேயே பிறந்து உங்களுக்காக சேவை புரியும் வானதி சீனிவாசன் அக்காவிற்கு வாக்களியுங்கள் என்றும் அப்பொழுதுதான் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரும் என்றும் தெரிவித்தார். மேலும் அவரது பிரபல வசனத்தில் "மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க. கோவையில் தாமரை மலரும் தமிழ் நாடு வளரும்" என்று தெரிவித்தார். பிரச்சாரத்திற்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து நடனமும் ஆடினார்.