Publish Date: Sat, 23 Sep 2017 (17:30 IST)
Updated Date: Sat, 23 Sep 2017 (17:32 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு புதிய பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் தொடங்குவதற்கு ஆலோசனை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இரு அணிகளும் ஒன்றான பின் எடப்பாடி அணி மற்றும் தினகரன் அணி என இரு அணிகள் உருவாகியுள்ளது. அதில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ இதழான நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கை மற்றும் ஜெயா தொலைக்காட்சி ஆகியவை தினகரன் மற்றும் சசிகலா தரப்பிற்கு ஆதரவாகவே செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
எனவே, அவற்றை கைப்பற்ற எடப்பாடி தரப்பில் சில முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், அவை இரண்டும் வேறொரு தனியார் நபரின் பேரில் பதிவாகியிருப்பதால், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. அதையும் மீறி கைப்பற்றினால் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதால் அந்த முயற்சியை எடப்பாடி தரப்பு கைவிட்டு விட்டது.
ஆனால், தனது தரப்பு தகவல்கள் மற்றும் செய்திகளை அதிமுக தொண்டர்களிடம் எடுத்து செல்ல நமக்கும் ஒரு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி வேண்டும் என அதிமுக அமைச்சர்கள் சிலர் எடப்பாடியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து ‘நமது அம்மா’ என்கிற பெயரில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியும் தொடங்கலாம் என தீர்மானிக்கப்பட்டு, அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாகவும், நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆசிரியர் ஒருவரையே ‘நமது அம்மா’ பத்திரிக்கையிலும் பணியாற்றவுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.