புதுக்தோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியின் பேருந்து மர்மமான முறையில் காணாமல் போனதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், ஆலங்குடி போலீசார் விசாரணை செய்தது அந்த பஸ்ஸை கடத்தியது கல்லூரி மாணவரக்ள் என தெரிய வந்துள்ளது.
தனியார் கல்லூரிக்கு சொந்தமான காணாமல் போன பேருந்து அறந்தாங்கி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி போலீசார், உடனடியாக விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் அதே கல்லூரியில் பயிலும் 4 மாணவர்கள் தான் அந்த பேருந்தை கடத்தியது தெரிய வந்தது. கல்லூரி காவலரிடம் அவர்கள் "ஸ்பேர் பஸ் எடுத்துக்கொண்டு வரச் சொன்னார்கள்" என்று கூறிவிட்டு சென்றதாகவும், ஆனால், பேருந்து வெளியில் சென்ற பிறகு தான் இது மாணவர்களின் செயல் என்று தெரிய வந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மாணவர்கள் பேருந்தை திட்டமிட்டு கடத்தினார்களா? இதற்குப் பின்னால் வேறு ஏதாவது உள்நோக்கம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் புகாரின் அடிப்படையில், பேருந்தை கடத்திய மாணவர்களை கண்டுபிடிக்க ஆலங்குடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.