Publish Date: Sat, 24 Jun 2017 (03:50 IST)
Updated Date: Sat, 24 Jun 2017 (05:52 IST)
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்கு நன்றி செலுத்தும் விதமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் அப்பல்லோவிற்கு தாரை வார்க்க கோவில் நிர்வாகம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மயிலாப்பூர் பகுதி மக்கள் கோவில் நிர்வாகம் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மயிலாப்பூர் லஸ் பகுதியில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த அமிர்தாஞ்சன் நிறுவனம் கோவிலுக்கே மீண்டும் அந்த இடத்தை கொடுத்துவிட்டது. தற்போது கோவில் இடத்தில் செயல்பட்டு வரும் ‘ரானடே நூலகம்' என்ற நூலகத்தையும் காலி செய்துவிட்டால் அந்த பகுதியில் உள்ள 26 ஏக்கர் நிலம் கோவில் கைவசம் மீண்டும் வந்துவிடும்
இந்த நிலத்தை அப்படியே அப்பல்லோவிற்கு குத்தகைவிட உள்ளதாகவும், இதற்கு கோவில் நிர்வாகிகளில் ஒருவராக உள்ள அப்பல்லோ மருத்துவமனை பிரதா ரெட்டியின் மருமகன் விஜயகுமார் தீவிர முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது. நூலகம் நடத்துபவர்கள் முதலில் சேவை நோக்கத்தில் நடத்தியதாகவும், ஆனால் தற்போது வணிக ரீதியில் நடத்துவதோடு, நிர்வாகத்தின் அனுமதியின்றி கட்டிடத்தை மராமத்து செய்ததாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். கோவில் நிலம் அப்பல்லோவிற்கு செல்லுமா? என்பதை இனிமேல்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்