ஜோலார்பேட்டை கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் அவரது மனைவி சரண் அடைந்தார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து உணவில் விஷம் கலந்து கணவரை கொன்றதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள மண்டலவாடி மூர்த்தியூர் பகுதியை சோந்தவர் ரமேஷ் (45). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி அம்சா. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் கடந்த 16ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
இதுகுறித்து ரமேஷின் தம்பி சம்பத் தெரிவித்த தகவலின்பேரில் விஏஓ மீராதேவி, கடந்த 24 ஆம் தேதி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் தலைமறைவான ரமேஷின் மனைவி அம்சா (35) என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அம்சா, திருப்பத்தூர் வட்டாச்சியர் ஜெயக்குமார் முன் சரண் அடைந்தார்.
வட்டாச்சியரிடம் அம்சா அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:
எனக்கும் குன்னத்தூரை சேர்ந்த திருப்பதி (36) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. எங்களுக்கு இடையூறாக என் கணவர் இருந்தார். எனவே இருவரும் சேர்ந்து அவரை ஒழித்துகட்ட திட்டம் தீட்டினோம். அதன்படி கடந்த 15 ஆம் தேதி பெங்களூரில் வேலைபார்த்து வந்த எனது கணவரை சந்திக்க நானும், திருப்பதியும், மகள் லாவண்யா ஆகிய 3 பேரும் காரில் சென்றோம். 3 பேரும் ஒரு ஓட்டலில் சாப்பிட்டோம்.
எனது கணவருக்கு முட்டை பிரைடு ரைஸ் பிடிக்கும் என்பதால் அவருக்கும் ஒரு பார்சல் வாங்கி அதில் திருப்பதி விஷத்தை கலந்தார். வீட்டிற்கு சென்று அதை எனது கணவரிடம் கொடுத்தோம் அவர் சாப்பிட்டவுடன் அவரை காரில் அழைத்து கொண்டு மூர்த்தியூருக்கு புறப்பட்டோம். இந்நிலையில் எனது கணவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
எங்களை திருப்பதி, திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டார். அப்போது எனது கணவர் வயிற்று வலியால் துடித்தார். அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துவிட்டு மூர்த்தியூருக்கு வந்தோம். இரவில் வயிற்றுவலியால் துடித்த எனது கணவர் இறந்தார். மறுநாள் எனது கணவரை மூர்த்தியூரில் அடக்கம் செய்தோம் என்று அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து வட்டாச்சியர், அம்சாவை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன்பேரில் காவல்துறையினர், அம்சாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் திருப்பதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.