Publish Date: Thu, 10 Oct 2024 (12:06 IST)
Updated Date: Thu, 10 Oct 2024 (12:09 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் சகோதரர் முரசொலி செல்வம் இன்று காலமானதை அடுத்து, அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும், கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தங்கை செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் இன்று பெங்களூரு மருத்துவமனையில் காலமானார்.
அவருடைய உடல் சென்னை கொண்டு வரப்பட்டு, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
திமுகவின் 'முரசொலி' நாளிதழின் வளர்ச்சிக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் என்பதும், நிர்வாக ஆசிரியராக பொறுப்பு வகித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முரசொலி செல்வத்தின் மறைவுக்கு, திமுக தலைவர்கள், தொண்டர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.