Publish Date: Fri, 03 Apr 2020 (15:46 IST)
Updated Date: Fri, 03 Apr 2020 (15:48 IST)
ஏப்ரல் 5ம் தேதி விளக்குகள் ஏற்ற சொல்லி பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளை மறுநாள் இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்து விட்டு மெழுகுவர்த்தி அல்லது தீபம் உள்ளிட்டவற்றை ஏற்றி மக்கள் ஒற்றுமையை நிரூபிக்கவும், கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு உந்துதல் அளிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது இந்த அறிவிப்பு வரவேற்பையும், பகடிகளையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்த தனது அதிருப்தியை தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் ”பிரதமர் உரை பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. கொரோனா எதிர்ப்பில் ஒற்றுமையை காட்டுவதற்காக ஒருமுறை ' கைதட்ட' சொன்னதே போதுமானது. அதுவே வேடிக்கை விளையாட்டாக அமைந்தது. மீண்டும் இது கேலிக்கூத்தாக உள்ளது. கொரோனாவின் பெயரால் குடிமக்களை குட்டிக்கரணம் போடச்சொல்லி 'குரங்காட்டம்' நடத்துகிறார் “ என கூறியுள்ளார்.