Publish Date: Thu, 15 Sep 2022 (08:42 IST)
Updated Date: Thu, 15 Sep 2022 (08:44 IST)
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்.
முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான இன்று அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின். அப்போது மாணவர்களுடன் அமர்ந்து அவர் சிற்றுண்டியை உண்டார்.
முதற்கட்டமாக, சென்னையில் 36, திருச்சியில் 40, காஞ்சிபுரத்தில் 20, கடலூரில் 15, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 21, வேலூரில் 48, தூத்துக்குடியில் 8, மதுரையில் 26, சேலத்தில் 54, திண்டுக்கலில் 14, திருநெல்வேலியில் 22, ஈரோட்டில் 26, கன்னியாகுமரியில் 19, கோயம்புத்தூரில் 62 பள்ளிகளிளும் காலை சிற்றுண்டி திட்டம் அமலுக்கு வருகிறது.
சிற்றுண்டியில் என்னென்ன வகை உணவுகள் வழங்கப்படும் என்பது குறித்த தகவலையும் தமிழக அரசு முன்னரே வெளியிட்டிருந்தது. அதன்படி
திங்கட்கிழமை ரவா உப்புமா, செவ்வாய்க்கிழமை ரவா கிச்சடி, புதன்கிழமை ரவா பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை சேமியா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் ரவா கேசரி, சேமியா கேசரி வழங்கப்படும்.
மேலும் ஒரு குழந்தை ஒரு நாளைக்கு வழங்கப்படும் காலை உணவிற்கான மூலப் பொருளின் அளவு 50 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள் என்றும், ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படும் என்பது கூடுதல் தகவல்.