Publish Date: Tue, 02 Apr 2024 (15:43 IST)
Updated Date: Tue, 02 Apr 2024 (15:45 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ரூ.13.5 லட்சம் பணம் மற்றும் 13 தங்க கட்டிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் குர்னூல் மாவட்டம் அடோனி பகுதியைச் சேர்ந்த ஜமேதார் மகபூப் பாஷா என்ற 60 வயது நபரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனை அடுத்து உரிய ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரத்துக்கு அதிகமாக எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதி அமலில் இருக்கும் நிலையில் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன பரிசோதனை செய்து லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணத்தை கைப்பற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு வந்த 60 வயது நபர் மகபூப் பாஷா என்பவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த நிலையில் அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.13.5 லட்சம் ரொக்க பணம் மற்றும் 13 தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். அவருக்கு பின்புலமாக ஏதாவது ஒரு அரசியல் தலைவர் இருக்கிறாரா என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.