Publish Date: Sun, 27 Jan 2019 (10:52 IST)
Updated Date: Sun, 27 Jan 2019 (10:54 IST)
மதுரையில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட இன்று பிரதமர் மோடி வருகை தருகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாகவும் மாற்ற பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது முதல் நபராக பாஜக கூட்டணியில் சேர்ந்த வைகோ, அதேபோல் தேர்தல் முடிந்ததும் முதல் நபராக கூட்டணியில் இருந்து வெளியேறினார். அதுமுதல் மோடி எதிர்ப்பு அரசியலை செய்து வரும் வைகோவும் அவரது தொண்டர்களும் மதுரை வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட தயார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திமுக, த.பெ.தி.க., பெரியார் சிந்தனை கொண்ட இயக்கங்களின் தொண்டர்கள் மதுரை பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக மதுரை பேருந்து நிலையத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ள இடத்தில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்ததோடு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனர்