Publish Date: Thu, 06 Aug 2020 (13:39 IST)
Updated Date: Thu, 06 Aug 2020 (13:41 IST)
தமிழகத்தில் இ-பாஸ் முறையால் மக்கள் அவதிப்படுவதால் அதை ரத்து செய்ய வேண்டுமென எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க உள்ளவர்கள் முன்னதாக இ-பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் பலர் அவசர பயணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்காததால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மறுபுறம் இ-பாஸ் பெற்றுத்தர ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இ-பாஸ் பெறுவதற்கான விண்ணப்பத்தை மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு எளிமைப்படுத்தியுள்ளதாகவும், மக்களுக்கு உடனடியாக இ-பாஸ் கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த இ-பாஸ் பிரச்சினை குறித்து பேசியுள்ள முக ஸ்டாலின் ”தமிழகத்திற்குள் அவசர தேவைகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் இ-பாஸ் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது, எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு மாவட்டங்களுக்குள்ளாக பயனிப்பதற்கு இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.