Publish Date: Thu, 27 Feb 2020 (20:40 IST)
Updated Date: Thu, 27 Feb 2020 (20:41 IST)
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மார்ச்1-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார் மார்ச் 1ம் தேதி தன்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டாம் எனவும் அவர் தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழினத்தின் நிரந்தரப் பேராசிரியரும் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் எனது பெரியப்பாவுமான பேராசிரியர் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். முக்கால் நூற்றாண்டு காலம், இந்த இனத்துக்கும் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் - திராவிட இயக்கத்துக்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரியப் பெருமகனார் உடல்நலிவுற்றிருக்கும் இந்த சூழலில் மார்ச்-1ஆம் நாள், நான் எனது பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, கழக முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் என்மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச்-1 அன்று என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வரவேண்டாம் என பணிவன்புடன்
வேண்டுகிறேன். தமிழர் நலன்காக்க தன்னை ஒப்படைத்துக் கொண்ட பேராசிரியப் பெருமகனார் நலம் பெற அனைவரும் தங்களது உள்ளார்ந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்திக் கொள்வோம்!
இவ்வாறு முக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.