Publish Date: Sat, 26 Jan 2019 (06:46 IST)
Updated Date: Sat, 26 Jan 2019 (06:48 IST)
ஜாக்டோ ஜியோ அமைப்பில் உள்ள ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் அரசு பள்ளி மாணவர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு அதிரடியாக முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், 'ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லையெனில் தகுதித்தேர்வு எழுதிய 1 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தயாராக உள்ளதாகவும், ஏழை மக்கள் குழந்தைகளின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்பப்பெறாவிடில் நாங்கள் கண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் ஆட்சியர்கள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் பணி இடத்திற்கு தகுதியுள்ள வேறு ஒருவர் நியமிக்கப்படுவர் என்றும், சென்னை முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர், தலைமைச்செயலர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர்களிடம் இருந்து அடுத்தடுத்த எச்சரிக்கை வந்து கொண்டிருப்பதால் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.