Publish Date: Mon, 13 Jul 2020 (10:41 IST)
Updated Date: Mon, 13 Jul 2020 (10:44 IST)
சீன செயலிகளை தடை செய்தது போல பப்ஜியும் தடை செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளது இளைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் டிக்டாக் போல இளைஞர்கள், சிறுவர்களிடையே பெரும் பயன்பாட்டை பெற்றுள்ளது பப்ஜி கேம். இந்த விளையாட்டால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல சிறுவர்கள் மன உளைச்சலால் தற்கொலை முயற்சிகள் செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதாக செய்திகள் தினசரி வெளியாகி வருகின்றன.
இந்த பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பலர் ஆரம்பம் முதலே குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டது குறித்து தமிழக அமைச்சர் உதயகுமாரிடம் கேட்கப்பட்டபோது, சீன செயலிகளை தடை செய்த மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக கூறிய அவர், தொடர்ந்து இளைஞர்களை சீரழித்து வரும் பப்ஜி விளையாட்டையும் தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த முடிவை பலர் வரவேற்றுள்ள நிலையில், பப்ஜி விளையாடும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பப்ஜி விளையாட்டை தடை செய்யக்கூடாது என அவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவிட்டு வருகின்றனர்.