Publish Date: Mon, 13 Aug 2018 (16:58 IST)
Updated Date: Mon, 13 Aug 2018 (17:00 IST)
அரசியல் தலைவர்களின் மரணம் பற்றி அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்த போது அவரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய திமுக கோரிக்கை வைத்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த தமிழக அரசு காமராஜர் நினைவிடம் அருகே உடம் கொடுப்பதாய் அறிவித்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுக்க, தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாகவே அமைந்தது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைச்சர் உதயகுமார் “ ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம் கட்ட முயற்சி செய்த போது அதை எதிர்த்து திமுகவின் வழக்கு போட்டனர். தற்போது கருணாநிதிக்கு இடம் வேண்டு என்பதற்காக இரவோடு இரவாக எல்லா வழக்குகளையும் வாபஸ் பெற்றுவிட்டனர். இனிமேல், ஜெ.விற்கு மணிமண்டபம் கட்ட எந்த தடையும் இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது. சிலர் இறந்தால்தான் நாட்டுக்கு விமோசனம் கிடைக்கிறது” என அவர் கூறினார்.
அதாவது, கருணாநிதி இறந்ததால்தான் ஜெ.விற்கு மணிமண்டபம் கட்ட முடிந்துள்ளது என பொருள் படும் படி அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.