Publish Date: Fri, 18 Nov 2022 (16:48 IST)
Updated Date: Fri, 18 Nov 2022 (16:50 IST)
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் இலவச மின்சாரம் ரத்தாகுமா என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரிய மின்கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்கும் அறிவிப்பை சமீபத்தில் தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். மின்கணக்கீடு மற்றும் கட்டண முறையை எளிதாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மின்வாரிய கணக்கில் ஆதார் எண்ணை இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காது என வதந்தி பரவியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி “மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது அவர்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருந்தாலும் கூட அவற்றிற்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.