Publish Date: Mon, 29 Jan 2018 (19:01 IST)
Updated Date: Mon, 29 Jan 2018 (19:06 IST)
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதற்காகவே நியமிக்கப்பட்ட அமைச்சர் என திமுக செய்தித்தொடர்பாளர் தமிழன் பிரசன்னா விமர்சித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதுவரை ஊடகங்களில் அதிகமாக பேசாத அமைச்சர்கள் பேச ஆரம்பித்தார்கள். குறிப்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதிகமாக ஊடகங்களை சந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குறித்து அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில் ஸ்டாலின் ஆட்சியை கலைத்துவிடலாம் என்ற நினைப்பில் தான் இந்த மறியல் போராட்டங்களை நடத்துகிறார் என குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து பிரபல தமிழ் வார இதழின் இணையத்தில் பேசிய திமுக செய்தித்தொடர்பாளர் தமிழன் பிரச்சன்னா, ஜெயலலிதா இருந்தபோது ஜெயக்குமார் எந்த மூலையில் தூக்கி எறியப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு பேசுவதற்கான ஒரு அமைச்சரை அறிவித்திருக்கிறார்கள் என்றால் அவர் ஜெயக்குமார்தான் என்றார் அதிரடியாக.
மேலும் மு.க.ஸ்டாலின் நிச்சயம் கனவு காண்கிறார். இந்த ஆட்சியை கலைத்துவிட்டு, தமிழக மக்களுக்கு ஒரு நல்லாட்சியை தரவேண்டும் என்கிற நல்ல கனவை காணுகிறார் என்றார் தமிழன் பிரசன்னா.