Publish Date: Wed, 01 Nov 2017 (10:28 IST)
Updated Date: Wed, 01 Nov 2017 (10:30 IST)
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மழைநீர் சரியாக செல்லும் வகையில் கால்வாய்கள் தூர்வாராததால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பொதுமக்களும், எதிர்க்கட்சியினர்களும் சமூக ஆர்வலர்களும் புகார் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மழை குறித்து ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 'மழை என்று வந்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும்' என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு அமைச்சரே இவ்வாறு பேசியுள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
குறிப்பாக இதுகுறித்து கண்டன அறிக்கை ஒன்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை இந்த மழை அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் மழை வந்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதல்ல' என்று கூறியுள்ளார்.