Publish Date: Mon, 27 Dec 2021 (15:33 IST)
Updated Date: Mon, 27 Dec 2021 (18:09 IST)
கோவையில் நடந்த திமுக கூட்டம் உள் அரங்கில் நடைபெற்றது என டிடிவி கேள்விக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.
இதனை டிடிவி தினகரன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா?
ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஓமிக்ரான் பரவும் என்று திமுக அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ? என நக்கலாய் விமர்சித்துள்ளார். இதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது,
கோவையில் நடந்த திமுக கூட்டம் உள் அரங்கில் நடைபெற்றது. ஆனால் அமமுக வெளி இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டார்கள், அதனால் தான் அனுமதி கிடைக்க வில்லை. பொது வெளியில் ஊர்வலம், மாநாடு நடத்த மட்டும் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் தனியாக வந்து அஞ்சலி செலுத்த அனுமதி வாங்கி ஊர்வலம் சென்ற ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகிய அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.