Publish Date: Fri, 30 Sep 2022 (15:06 IST)
Updated Date: Fri, 30 Sep 2022 (16:16 IST)
இந்தியாவின் முன்னோடியாக திகழும் அவரை பொம்மை முதல்வர் என்று கூறியது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் காட்டம்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்றும் அவரது குடும்பம் தான் ஆட்சி செய்து வருகிறது என்றும் திமுகவின் குடும்ப ஆட்சியால் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த்தார்.
மின் கட்டண உயர்வை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் மு க ஸ்டாலினை கடும் விமர்சனம் செய்தார். மக்களின் பிரச்சனைகளில் திமுக அரசு கவனம் செலுத்தவில்லை என்றும் திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரி உயர்வு என்றும் திராவிட மாடல் என கூறி மக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் வசூல் மன்னராக நமது முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார் என்றும் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஊழல் என்றும் பொம்மை முதலமைச்சராக தான் அவர் செயல்பட்டு வருகிறார் என்றும் அவரை இயக்குவது அவரது குடும்பத்தினர்தான் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்திற்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லை என்றும் இந்த ஆட்சியில் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் அமோகமாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மதுரையில் வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சிவகாசியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் மு.க. ஸ்டாலினை பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கடந்த அதிமுக ஆட்சியில் வைத்து விட்டு சென்ற ரூ. 6 லட்சம் கோடி கடனை மு.க.ஸ்டாலின் சமாளித்து 20 மணி நேரம் உழைத்து வருகிறார். இந்தியாவின் முன்னோடியாக திகழும் அவரை பொம்மை முதல்வர் என்று கூறியது கண்டிக்கத்தக்கது.
Edited BY: Sugapriya Prakash