Publish Date: Sat, 16 Dec 2017 (15:39 IST)
Updated Date: Sat, 16 Dec 2017 (15:50 IST)
அறிவுரை கூறிய நபரை, எம்.பி.பி.எஸ் மாணவன் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் குமார். இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் இரண்டாவது மகள் பல் மருத்துவம் படித்துவருகிறார். மகன் சந்தோஷ் குமார் சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்துவருகிறார். விடுமுறையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ், படிக்க விருப்பமில்லை எனக் கூறி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளார். தந்தை குமாரும் தாயார் வசந்தியும் பலமுறை சொல்லியும் சந்தோஷ் கல்லூரிக்கு செல்ல மறுத்துள்ளார்.
எனவே சந்தோஷின் தந்தை, தனது நண்பரிடம் நடந்தவற்றைக் கூறி, தன் வீட்டிற்கு வந்து மகனிற்கு அறிவுரை கூறும்படி கேட்டுக்கொண்டார். இதனையேற்ற குமாரின் நண்பர் அவரது வீட்டிற்கு சென்று சந்தோஷிற்கு அறிவுரை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சந்தோஷை கைது செய்தனர். இதனால் தக்கலைப் பகுதி அதிர்ச்சியில் உறைந்துள்ளது.