அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் தமிழக அரசே கையேந்தி நிற்கும் அவலமான சூழ்நிலை ஏற்படும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எந்த அளவுக்கு அறியாமையுடன் செயல்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து மிகவும் வியப்படைகிறேன்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டால், இப்போது இலவசங்களுக்காக மக்கள் கையேந்தும் நிலை மாறி, அன்றாட செலவுகளுக்காக தமிழக அரசே கையேந்தி நிற்கும் அவலமான சூழ்நிலை ஏற்படும் என்பது உறுதி.
இந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தின் பொருளாதார நிலைதான் மிகவும் மோசமாக உள்ளது. இத்தகைய சூழலில் இலவசத் திட்டங்களை மட்டும் அறிவித்து செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவாது. மாறாக, இப்போது தமிழகம் சிக்கியுள்ள கடன் வலையில் இருந்து மீண்டெழுந்து உபரி பொருளாதார மாநிலமாக முன்னேறுவதற்குரிய அனைத்து வாய்ப்புகளையும் இந்த இலவசத் திட்டங்கள் பறித்துவிடும்.
பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க திட்டங்களை அதிமுகவும், திமுகவும் போட்டிப்போட்டு காப்பியடித்திருக்கின்றன. பாமகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இலவசத் திட்டங்களைப் பார்க்கும் போது அதிகாரத்தை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா துடிப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஜெயலலிதாவின் தோல்வி பயமும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.